மெரினா கடற்கரையில் புதிய அடையாளம்!
“தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு” எனும் வள்ளுவனின் வாக்குக்கு உயிர் கொடுக்கும் வகையில், தமிழக அரசு கல்வியின் முக்கியத்துவத்தைப் பறைசாற்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சென்னை – மெரினா கடற்கரையில் பள்ளிக் கல்வித் துறையின் பெருமையை விளக்கும் கற்றனைத் தூறும் அறிவு சிலை அமைக்கப்பட்டுள்ளது.

கற்றனைத் தூறும் அறிவு சிலை திறப்பு விழா!
மார்ச் 10, 2026 அன்று, சென்னை மெரினா கடற்கரையில் 1 கோடியே 43 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நற்பணி கழகத்தால் அமைக்கப்பட்டுள்ள `கற்றனைத் தூறும் அறிவு` சிலையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். கல்வித் துறையில் தமிழகம் அடைந்துள்ள மைல்கற்களைக் கொண்டாடும் விதமாக கற்றனைத் தூறும் அறிவு சிலை நிறுவப்பட்டுள்ளது.

தொழில்நுட்பமும் நவீனக் கல்வியும்
தமிழ்நாட்டுப் பள்ளிக் கல்வித் துறை, நவீன காலத்திற்கு ஏற்ப மாணவர்களைத் தயார்படுத்தி வருகிறது. குறிப்பாக, அரசுப் பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோட்டிக்ஸ் பாடங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. நடுநிலைப் பள்ளிகள் வரை உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் (Hi-Tec Labs) விரிவாக்கப்பட்டுள்ளன. கரும்பலகைகளுக்குப் பதிலாக நவீனத் திரைகள் (Smart Classrooms) மூலம் கற்றல் அனுபவம் மேம்படுத்தப்பட்டுள்ளது.
கல்விப் புரட்சிக்கான முன்னோடித் திட்டங்கள்
மாணவர்களின் வருகையையும், கற்றல் தரத்தையும் உயர்த்த அரசு செயல்படுத்தி வரும் சில முக்கியத் திட்டங்கள்:
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் மூலம் மாணவர்களின் பள்ளி வருகை அதிகரித்துள்ளதுடன், அவர்களின் நினைவாற்றல் மற்றும் கவனிப்புத் திறன் மேம்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இல்லம் தேடிக் கல்வி & வாசிப்பு இயக்கம் மூலம் மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க, பல்வேறு தன்னார்வத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. புதுமைப் பெண் & தமிழ்புதல்வன் போன்ற திட்டங்களின் மூலம் உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு நிதியுதவி அளித்து அவர்களின் எதிர்காலத்தை உறுதி செய்யப்படுகிறது. `நான் முதல்வன்` திட்டதின் மூலம் மாணவர்களின் தனித்திறன்களைக் கண்டறிந்து அவர்களை உலகத் தரத்திற்கு உயர்த்த நடவரிக்கை எடுக்கப்படுகிறது.
உட்கட்டமைப்பு வசதிகள்
“நம்ம ஊரு நம்ம பள்ளி” திட்டத்தின் மூலம் தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்புடன் அரசுப் பள்ளிகளின் கழிப்பறைகள், குடிநீர் வசதிகள் மற்றும் டிஜிட்டல் கல்வி வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும், விலையில்லாப் பாடப்புத் தகங்கள், மிதிவண்டிகள் மற்றும் சீருடைகள் மூலம் மாணவர்களின் கல்விச் சுமை குறைக்கப்பட்டுள்ளது.
‘கற்றனைத் தூறும் அறிவு’ நூல் வெளியீடு
இந்தியாவிலேயே பள்ளிக் கல்வியில் முன்னோடி மாநிலமாகத் திகழும் தமிழ்நாடு, இந்தப் புதிய சிலையின் வாயிலாகத் தனது கல்விப் பயணத்தை உலகிற்குப் பறைசாற்றுகிறது. இந்தச் சிலை வெறும் கல் அல்ல, அது தமிழ்நாட்டு மாணவர்களின் அறிவுச் சுரங்கத்தின் அடையாளம் என மாண்புமிகு முதலமைச்சர் தனது உரையில் தெரிவித்துள்ளார். மேலும் திராவிட மாடல் அரசில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களின் சாதனைகள் அடங்கிய ‘கற்றனைத் தூறும் அறிவு’ எனும் நூலை வெளியிட்டுச் சிறப்பித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின், மாண்புமிகு பொதுப் பணித் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு, மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன், மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் திரு. பி.கே. சேகர்பாபு, மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி ஆர்.பிரியா, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் திரு. திண்டுக்கல் ஐ. லியோனி, பள்ளிக் கல்வித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மருத்துவர் பி. சந்திர மோகன் இ.ஆ.ப., மேலாண்மை இயக்குநர் மருத்துவர் மா. ஆர்த்தி இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி நிலைக் குழு தலைவர் திரு.நே.சிற்றரசு, பள்ளிக் கல்வி இயக்குநர் முனைவர் ச. கண்ணப்பன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
