முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் பெருவெற்றி

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மாணவர்களின் உடல்நலம் மற்றும் கல்வியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக மாநில திட்டக்குழு அறிக்கை தெரிவிக்கிறது.

அரசுபள்ளி மாணவர்கள் முதலமைச்சர் காலை உணவுத்திட்டத்தில் சத்தான காலை உணவை உட்கொள்கிறார்கள்.

இந்தியாவின் முன்னோடி தமிழ்நாடு

 நீதிக்கட்சி ஆட்சிக்காலத்தில் அன்றைய மதராஸ் மாகாணத்தில் முதன்முதலாக பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பிறகு காமராஜர் ஆட்சியில் இலவச மதிய உணவுத் திட்டமாக செயல்படுத்தப்பட்டது. அதன்மூலம், கல்வித்துறையில் ஒரு பெரும் மறுமலர்ச்சியே ஏற்பட்டது. அதன்பிறகு தற்போது தமிழ்நாட்டில் மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் ஆட்சியில் அறிமுகம் செய்யப்பட்டதுதான் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம். இத்திட்டமும் தன் நோக்கத்தை நிறைவேற்றி, ஒரு பெரும் வெற்றி கண்டுள்ளது.

காலை உணவுத் திட்டம் ஆய்வு

அரசுப் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 5 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை உணவு வழங்குவதை நோக்கமாகக்கொண்டு 2022 செப்டம்பரில் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது.

முதலமைச்சர் திரு. மு. க ஸ்டாலின் காலை உணவுத்திட்டத்தை தொடங்கிவைக்கிறார்.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் 31,008 பள்ளிகளில் 16.34 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். 2022 டிசம்பர் முதல் 2023 மார்ச் மாதம் வரையிலான மாதங்களில் மாநிலம் முழுவதும் 1,545 பள்ளிகளைச் சேர்ந்த 21,430 மாணவர்களிடையே திட்டத்தின் தாக்கம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகள் குறித்து மாநில திட்டக்குழு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டது. இதுதொடர்பாக ஆங்கிலப் பத்திரிகையான ‘தி பிரிண்ட்’ ஒரு கட்டுரை ஒன்றை வெளியிட்டது. அது தமிழ்நாடு அரசின் மீதும், மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீதும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மீதும் பெரும் மதிப்பைக் கூட்டியுள்ளது.

ஆய்வின் முடிவு சொல்வது என்ன?

தமிழ்நாடு அரசுப்பள்ளி மாணவன் உற்சாகமான வாசிப்பில் ஈடுபடுகிறான். காலை உணவுத் திட்டத்தால் வாசிப்பு திறன் அதிகரிப்பு.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தால் மாணவர்களின் உடல்நலன் மற்றும் கற்றல் திறனில் மேம்பாடு ஏற்பட்டுள்ளது. உடல்நலக் குறைவால் அரசுத் தொடக்கப்பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது 63.2% குறைந்துள்ளது. கடுமையான நோயினால் பாதிக்கப்படுவது 70.6% குறைந்துள்ளது. மாணவர்கள் மருத்துவமனைக்கு வருகை தருவது, கிராமப்பகுதிகளில் 68.4 சதவீதமாகவும், நகர்ப்பகுதிகளில் 29.4 சதவீதமாகவும் குறைந்துள்ளதாக மாநிலத் திட்டக்குழு அறிக்கை கூறுகிறது.

காலை உணவுத் திட்டத்தால் கற்றல் திறன்  அதிகரிப்பு :

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பள்ளிமாணவர்கள் மத்தியில்

இத்திட்டத்தின் மூலம் பாடங்களை தானாகவே கவனிக்கும் ஆற்றல் 85.8 சதவீதத்தில் இருந்து 93.7 சதவீதமாக உயர்ந்துள்ளது.ஆசிரியர்களின் அறிவுரைகளைப் பின்பற்றும் திறன் 91.3 சதவீதத்தில் இருந்து 95.5 சதவீதமாக உயர்ந்துள்ளது என மாநிலத் திட்டக்குழு அறிக்கை கூறுகிறது. கிராமப்புற மற்றும் நகர்ப்புறத்தைச் சேர்ந்த 5300 மாணவர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் வகுப்பறைக்கு வருகை தருவதும், புரிந்துகொள்ளும் ஆற்றலும், கூர்ந்து கவனிப்பதும் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

அரசுபள்ளி மாணவர்கள் முதலமைச்சர் காலை உணவுத்திட்டத்தில் சத்தான காலை உணவை உட்கொள்கிறார்கள்.

இத்திட்டத்தால் மாணவர்களின் வருகைப்பதிவு 10 சதவீதம் அதிகரித்துள்ளது. 30 சதவீத மாணவர்களின் கவனம் செலுத்தும் திறனில் குறிப்பிட்ட முன்னேற்றம் காணப்படுவதாக ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் கூறுகின்றனர் என மாநிலத் திட்டக்குழு அறிக்கை தெளிவுபடுத்துகிறது.

காலை உணவுத் திட்டத்தால் பேச்சுத்திறன் அதிகரிப்பு 

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மூலம் பேச்சுத்திறன் 92.9 சதவீதத்திலிருந்து 95.9 சதவீதமாக அதிகரித்துள்ளதாக அறிக்கை கூறுகிறது. மாணவர்களின் வாசிப்புத் திறன் 88.9 சதவீதத்திலிருந்து 94.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.கையெழுத்துத் திறன் 90.2 சதவீதத்திலிருந்து 93.4 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மாநிலத் திட்டக்குழு அறிக்கை விளக்குகிறது.

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பள்ளிமாணவர்களுடன் உரையாடுகிறார்

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தால் நினைவாற்றல் அதிகரித்துள்ளதும் தெரிகிறது.பாடங்களை நினைவுபடுத்தும் திறன் 71.4 சதவீதத்திலிருந்து 77 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மாநிலத் திட்டக்குழு அறிக்கை கூறுகிறது.

காலை உணவுத் திட்டத்தால் எழுதும் திறன் அதிகரிப்பு

காலை உணவுத்திட்டத்தால்  தமிழ்நாடு அரசுப்பள்ளி மாணவர்கள் அறிவியல் பாடத்தை சோர்வின்றி  உன்னிப்பாக கவனிக்கின்றனர்

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தால் வீட்டுப் பாடங்கள், எழுத்துப்பணிகளை முடிக்கும் திறன் 89.6 சதவீதத்திலிருந்து 95.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் திறன் 88.1 சதவீதத்திலிருந்து 92.5 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும், மாநிலத் திட்டக்குழுவின் அறிக்கை கூறுகிறது. 

Also Read : Tamil Nadu’s Trailblazing Reforms in Education Under Anbil Mahesh Poyyamozhi

காலை உணவுத் திட்டம் பெருவெற்றி

இத்திட்டம் மாணவர்களின் உடல்நலம் மற்றும் கல்வியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் மருத்துவமனைக்கு வருவது குறைந்துள்ளது. பெற்றோர்களில் சுமார் 97.4 சதவீதத்தினர் இத்திட்டத்தால் தங்கள் குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படுத்தப்பட்டதாக கூறுகின்றனர்.

அரசுப்பள்ளி ஆசிரியர் மாணவர்களுடன் உற்சாகமாக இருக்கும் வகுப்பு. காலை உணவு த்திட்டத்தின் பிரதிபலிப்பு.

95.7 சதவீதத்தினர் இதனால் தங்கள் குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளனர். புதிய ஆய்வின் முடிவுகள் இந்த திட்டம் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளதை உறுதிப்படுத்துகின்றன. எல்லாவிதங்களிலும் தனது திட்டங்கள் மூலமாக இந்தியாவிற்கே வழிகாட்டியாய்த் திகழும் தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மூலமாகவும் தனது பெருமையை நிலைநாட்டியுள்ளது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Tamil
Scroll to Top